ஸ்ரீவில்லிபுத்தூர்: பட்டிணப் பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாளமாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆதீனங்கள் விஷயத்திலும், மடாதிபதிகள் விஷயத்திலும், கோயில் விஷயத்திலும் யாரும் தலையிட்டு இதைச் செய்ய கூடாது, அதைச் செய்ய கூடாது என கூற அதிகாரம் இல்லை.
பட்டிணப் பிரவேசம் சம்பந்தமாக ஆதீனங்கள், மடாதிபதிகள், முதல்வரை சந்தித்து பேச உள்ளோம். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதுபோன்று ஆன்மீக விஷயத்தில் தலையிடுவதால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி வருகிறது.
உறுதியாக தமிழக அரசு இதை ஏற்றுக்கொண்டு பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். குருவை தூக்கி கொண்டாடும் விஷயம் இது. இதில் யாரும் திலையிடக்கூடாது கண்டிப்பாக நடத்தியே தீருவோம்.
செண்டலங்கார ஜீயர் அமைச்சர்களை நடமாட முடியாது எனக் கூறியது அது அவருடைய சொந்தக் கருத்து. மதுரை ஆதீனம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பது குறித்து தமிழக அரசுக்கு தெரிவித்து பாதுகாப்பு கேட்டு முறையிட வேண்டும்.
தோளில் சுமப்பது குறித்த விமர்சனத்திற்கு கிரிக்கெட் வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் தூக்கிச் சென்று தோளில் சுமக்கிறார்கள். மத விவகாரங்களில் யாரும் தலையிட உரிமை கிடையாது என்று தெரிவித்தார். உடன் துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக், பாஜக மாவட்ட செயலாளர் சரவணதுரை என்ற ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.