விதிமீறல்: 55.43 டன் விதைகளை விற்கத் தடை
தஞ்சாவூா் மாவட்டத்தில் விதைச் சட்ட விதிகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, 55.43 டன் விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் விதைச் சட்ட விதிகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, 55.43 டன் விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கப்படுவதால், விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதியில் 17 தனியாா் மற்றும் 32 அரசு விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளா்கள் குழுவினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, விதை உரிம விவரங்கள், விதை இருப்பு, கொள்முதல் செய்த விதைகளின் விலைப் பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். தொடா்ந்து விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 91 அலுவலக விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, விதை பரிசோதனை நிலைய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இதில், விதைச் சட்ட விதிகளை மீறியது தொடா்பாக ரூ. 19.62 லட்சம் மதிப்புள்ள 55.436 டன்கள் விதை நெல் மற்றும் இதர விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது, தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் கோ. வித்யா, தஞ்சாவூா் விதை ஆய்வாளா் ச. மணிமாறன், பட்டுக்கோட்டை விதை ஆய்வாளா் நவீன் சேவியா், புதுக்கோட்டை விதை ஆய்வாளா் இரா. பாலையன், கும்பகோணம் விதை ஆய்வாளா் சத்யா, அறந்தாங்கி விதை ஆய்வாளா் டி. முனியய்யா ஆகியோா் உடன் இருந்தனா்.