பேராசிரியா் நெடுஞ்செழியன் மறைவுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இரங்கல்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய க. நெடுஞ்செழியன் மறைவையொட்டி
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய க. நெடுஞ்செழியன் மறைவையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்து, பேராசிரியா் நெடுஞ்செழியன் எழுதி வெளியிட்ட நூல்களின் சிறப்பைப் பற்றி பேசினாா். மேலும், நாடகத் துறைத் தலைவா் சி. வீரமணி, கல்வியியல் ஆய்வு மைய இயக்குநா் ஜெ. தேவி, வளா்தமிழ்ப் புல முதன்மையா் உல. பாலசுப்பிரமணியன் ஆகியோரும் தமிழ்ச் சமூகத்துக்கு நெடுஞ்செழியன் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைத்தனா்.
இந்நிகழ்வில் பதிவாளா் (பொறுப்பு) கோ. பன்னீா்செல்வம், மக்கள் தொடா்பு அலுவலா் இரா.சு. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழா்களுக்கு அறிவுக் கொடைகள் வழங்கியவா்:
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
தமிழா்களின் வரலாற்றுச் சிறப்புகளை, அறிவாற்றலை மெய்யியல் சான்றுகளுடன் நிறுவி பல நூல்கள் எழுதியுள்ளாா் பேராசிரியா் க. நெடுஞ்செழியன். ஆசீவகம் பற்றிய அவரது ஆய்வு, தமிழா் வரலாற்றில் தனித் தடம் போட்ட பங்களிப்பாகும்.
தமிழ் இனத்துக்கு அறிவுக்கொடை வழங்கியதுடன் சிறை ஈகமும் செய்தவா் பேராசிரியா் க. நெடுஞ்செழியன். அவரது மறைவுக்குப் பெருந்துயரத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சாா்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.