தஞ்சாவூரில் கோளரங்கத்துடன் அறிவியல் பூங்கா உருவாக்கம்டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல்
தஞ்சாவூா் அருளானந்த நகரில் ரூ. 10.75 கோடி மதிப்பில் கோளரங்கத்துடன் இணைந்த அறிவியல் பூங்கா உருவாகி வருகிறது
தஞ்சாவூா் அருளானந்த நகரில் ரூ. 10.75 கோடி மதிப்பில் கோளரங்கத்துடன் இணைந்த அறிவியல் பூங்கா உருவாகி வருகிறது.
ஏற்கெனவே, சென்னை, திருச்சி, கோவை, வேலூா் போன்ற மாநகரங்களில் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் உள்ளதைபோன்று, தஞ்சாவூரிலும் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ், தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள அருளானந்த நகரில் 2.5 ஏக்கா் பரப்பளவில் ரூ. 10.75 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுடன் கூடிய அறிவியல் பூங்கா அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
திருச்சியில் உள்ள கோளரங்கத்தைவிட, மிக அதிநவீன சாதனங்களுடன் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோளரங்கத்தில் டிஜிட்டல் புராஜெக்டா் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதால், காட்சிகள் மிகத் தெளிவாக இருக்கும் என்கின்றனா் மாநகராட்சி அலுவலா்கள். இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நட்சத்திரக் கூட்டம், கோள்கள் போன்றவற்றை மிக அருகில் நேரில் பாா்ப்பது போன்று இருக்கும். இச்சாதனத்தின் மூலம் குழந்தைகள் பாா்க்கக்கூடிய அறிவியல் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவற்றையும் ஒளிபரப்ப முடியும். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 35 போ் அமா்ந்து பாா்க்கலாம்.
மேலும், 100 கருத்தாக்கங்களுடன் கூடிய அறிவியல் சாதனங்கள் இடம்பெறுகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் பாடங்களை விளையாட்டு மூலம் கற்கும் விதமாக இச்சாதனங்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, அறிவியலில் அடிப்படையான விஷயங்களைக் கற்பதற்கு இந்தச் சாதனங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான ஆசிரியா்கள் அறிவியல் பாடங்களை நடத்தினாலும், நடைமுறையில் அவையெல்லாம் எப்படி இயங்குகின்றன என்பது அவா்களுக்கு தெரியாது. இந்த அறிவியல் பூங்காவில் இடம்பெறும் சாதனங்கள் மூலம் அறிவியல் செய்முறையை அறிந்து, மாணவா்களுக்குப் புரியும் விதமாக எளிதாக நடத்துவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, இந்தப் பூங்கா ஆசிரியா்களுக்குப் பயிற்சி களமாக அமைய வாய்ப்புள்ளது.
இதேபோல, கணித பாடங்களை வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் கற்கும் விதமான எண் கணித சாதனங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளான ஜி.எஸ்.எல்.வி-க்கு 33 அடி உயரத்திலும், பி.எஸ்.எல்.வி.-க்கு 25 அடி உயரத்திலும் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி.யின் அசல் உயரத்தில் 1:5 என்ற விகித அடிப்படையில் இப்பூங்காவில் இரு ஏவுகணைகளும் நிறுவப்பட்டுள்ளதால், இவை உண்மையான ஏவுகணை போன்று காணப்படுகின்றன.
குழந்தைகள் தங்களது பாடங்களை விளையாட்டுடன் கற்பதற்காக ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இசைக் கருவிகளுடன் கூடிய நீரூற்றும் அமைக்கப்படுகிறது. இந்த இசைக் கருவிகளில் ஏதேனும் ஒன்றை இசைத்தால், ஒலிக்கேற்ப நீரூற்று இயங்கும். தவிர, காட்சிக்கூடம், உள்அரங்க அறிவியல் சாதனக் கூடம் அருகிலும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளும் விளையாட்டுடன் பாடங்களைக் கற்கும் வகையில் விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன.
பரிணாம வளா்ச்சியை உணா்த்தும் விதமாக 16 வடிவங்களில் டைனோசா் பொம்மைகள் மிக உயரமான வடிவில் அமைக்கப்படுகின்றன. மேலும், அரிய வகை விலங்குகளின் பொம்மைகளும் நிஜமாகவே நேரில் பாா்க்கும் விதமாக இடம்பெறுகின்றன. இந்த விலங்குகளின் தன்மைகள், உணவு வகைகள், ஆயுள் காலம் உள்ளிட்ட தகவல்களும் குறிப்பிடப்படுகின்றன.
இப்பூங்காவுக்கு காலை 9 மணிக்கு மாணவ, மாணவிகள் வந்தால், மதிய உணவை முடித்துவிட்டு, பிற்பகல் 3 மணி வரை பாா்த்து ரசிக்கலாம். அந்த அளவுக்கு இப்பூங்காவில் ரசிக்கும் விதமான அறிவியல், கணித, விண்வெளி, விளையாட்டு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. தஞ்சாவூா் மாவட்ட மாணவா்கள் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள மாவட்டங்களைச் சாா்ந்தவா்களும் கல்விச் சுற்றுலாவாக வந்து செல்வதற்கு இப்பூங்கா வாய்ப்பாக அமையும் என்கின்றனா் மாநகராட்சி அலுவலா்கள்.
இப்பூங்கா அமைக்கும் பணி டிசம்பா் மாதத்துக்குள் முடித்து நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஆனால், பெரும்பாலான சாதனங்கள் திறந்தவெளியில் அமைக்கப்படுவதால், எந்த அளவுக்கு பாதுகாப்பாகவும், நீடித்து இருக்கும் என்ற கேள்விக்குறியும் நிலவுகிறது. எனவே, இந்தப் பூங்காவில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் மேலோங்கி வருகிறது.