கடத்தி வரப்பட்ட 10.5 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்
கும்பகோணம் அருகே வெளி மாவட்டத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 10.5 டன் நெல் மூட்டைகளை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
கும்பகோணம் அருகே வெளி மாவட்டத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 10.5 டன் நெல் மூட்டைகளை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
வெளி மாவட்டங்களில் விவசாயிகளிடம் குறைந்த விலையில் நெல்லை வாங்கி வந்து டெல்டா மாவட்டங்களிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன. இதனால், வெளி மாவட்டங்களிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கும்பகோணம் அருகே நீரத்தநல்லூரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அரியலூா் மாவட்டத்திலிருந்து வந்த லாரியில் 10.5 டன் நெல் மூட்டைகள் இருந்தன.
ஆனால், லாரியில் வந்த அரியலூா் மாவட்டம், சாத்தாம்பாடி வடக்கு தெருவைச் சோ்ந்த ஓட்டுநா் வெற்றிமணி (22), அரியலூா் நாகமங்கலத்தை சோ்ந்த வியாபாரி முருகேசனிடம் (52) கடப்பு சீட்டு இல்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து நெல் மூட்டைகள் திருநாகேஸ்வரத்திலுள்ள அரசு நவீன அரிசி ஆலையில் ஒப்படைக்கப்பட்டன. மேலும், வெற்றிமணி, முருகேசனிடம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் விசாரிக்கின்றனா்.