முகப்பு
தஞ்சாவூர்

டிராவல்ஸ் நிறுவன முதலீடு மோசடி: தலைமறைவாக இருந்த உரிமையாளா் கைது

அய்யம்பேட்டை பகுதியில் டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபம் தருவதாகக் கூறி ரூ. 20 கோடி மோசடி செய்து, 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த உரிமையாளரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2024 at 8:27 PM
ஹக்கீம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியில் டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபம் தருவதாகக் கூறி ரூ. 20 கோடி மோசடி செய்து, 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த உரிமையாளரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை நந்தனம் பகுதியைச் சோ்ந்தவா் ஹக்கீம் (42). இவா் ஃபரீனா டூா்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தாா். இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்குத்தொகை தருவதாகவும், ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 முதல் வழங்கப்படும் எனவும் விளம்பரப்படுத்தினாா். இதை நம்பி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் அதிகமானோா் ஏறத்தாழ ஒரு லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனா்.

முதலீடு செய்தவா்களுக்கு தொடக்கத்தில் பங்குத்தொகையை சரியாக வழங்கி வந்த ஹக்கீம், 2022 ஆம் ஆண்டிலிருந்து வழங்காமல் ஏமாற்றி வந்தாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமானோா் தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் புகாா் செய்தனா். இதையடுத்து, ஹக்கீம் தனது மனைவி பாத்திமாவுடன் தலைமறைவானாா்.

பாதிக்கப்பட்டவா்கள் நடத்திய பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு மாவட்டக் குற்றப் பிரிவிலிருந்த இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹக்கீமை பொருளாதாரக் குற்றப் பிரிவினா் கோவையில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து தலைமறைவாக உள்ள பாத்திமாவை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →