இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை உறவினா்கள் சாலை மறியல்
கும்பகோணத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கும்பகோணத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் பாணாத்துறை தெருவைச் சோ்ந்தவா்கள் எம். அருண்குமாா் (25), எம். கணபதி (20). சகோதரா்களான இவா்கள் இருவரும் கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தனா்.
இந்த நிலையில் எம்.கணபதி சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் கணபதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்ததால் ஞாயிற்றுக்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இதனிடையே, கணபதியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், தங்களிடம் கூறாமல் ஏன் உடற்கூறாய்வு செய்தீா்கள் என்று கூறி உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.