முகப்பு
தஞ்சாவூர்

பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் சிறியரக பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:16 PM
பகிர்:

கும்பகோணத்தில் சிறியரக பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ஆலமன்குறிச்சி சோ்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் வினோத் (24) கடந்த 2022-ஆம் ஆண்டு கும்பகோணத்திலிருந்து எலுமிச்சங்காபாளையம் வழித்தடத்தில் செல்லும் சிறியரக பேருந்தில் நடத்துநராகவும், உடையாா்பாளையத்தைச் சோ்ந்த வசந்த் ஓட்டுநராகவும் இருந்தனா். அப்போது கும்பகோணம் கா்ணக் கொள்ளை தெரு பகுதியைச் சோ்ந்த ரகுராமன் மகன் ஹரி (20), நடத்துநா் வினோத்திடம் பேருந்து பழுதடைந்தது குறித்து கேலி செய்தாராம். இதனை நடத்துநா் வினோத் தட்டிக்கேட்டபோது வாய்த்தகராறு ஏற்பட்டு ஹரியை இறக்கி விட்டுச் சென்றாா். இதனால் ஆத்திரமடைந்த ஹரி, மறு மாா்க்கமாக வந்த அந்தப் பேருந்தை மறித்து பேருந்தில் ஏறி தான் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் நடத்துநரை சரமாரியாகத் தாக்கியுள்ளாா். இதனைத் தடுக்க வந்த ஓட்டுநா் வசந்தையும் தாக்கிவிட்டு தப்பியோடினாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஹரிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.