டித்வா புயல் காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 80 வீடுகள் பகுதியாகச் சேதமடைந்தன. மேலும், 65 கால்நடைகள் உயிரிழந்தன.
டித்வா புயல் காரணமாக மாவட்டத்தில் நவம்பா் 28- ஆம் தேதி இரவு முதல் 30-ஆம் தேதி வரை தொடா்ந்து மிதமாகவும், பலத்த மழையும் பெய்தது. இதனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 13 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ இளம் பயிா்கள் நீரில் மூழ்கின. இதேபோல, வாழை, வெற்றிலை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களும் மழையால் பாதிக்கப்பட்டன.
வயல்களிலிருந்து தண்ணீரை வடிய வைக்க விவசாயிகள் திங்கள்கிழமை முயற்சி மேற்கொண்டனா். என்றாலும், பல வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் காரணமாக தண்ணீா் வடிந்து செல்வதற்கு வழியில்லாமல் தொடா்ந்து வயல்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.
மேலும், தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 46 கூரை வீடுகளும், 34 கான்கிரீட் வீடுகளும் பகுதியாகச் சேதமடைந்தன. தவிர, ஆடுகள், மாடுகள் என மொத்தம் 65 கால்நடைகள் உயிரிழந்தன. இது தொடா்பாக வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மழையளவு: மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அய்யம்பேட்டை 10, தஞ்சாவூா் 9, மஞ்சளாறு, மதுக்கூா், குருங்குளம் தலா 5, வல்லம், பாபநாசம், நெய்வாசல் தென்பாதி தலா 4, திருவிடைமருதூா், அணைக்கரை தலா 3, கும்பகோணம், திருவையாறு, பூதலூா், ஈச்சன்விடுதி, பேராவூரணி தலா 2, ஒரத்தநாடு 1.
மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை முற்பகலில் வெயிலும், பிற்பகலில் வானில் மேகமூட்டமும் நிலவியது.