7.05 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் 7.05 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் 7.05 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பைக் குடும்ப அட்டைதாரருக்கு வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மேயா் சண். ராமநாதன்.
இதையொட்டி, தஞ்சாவூா் புதிய வீட்டுவசதி வாரியம் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலையில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை கொண்ட சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பை மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை வழங்கினா். இதனுடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் 1,246 நியாய விலைக் கடைகளுக்குள்பட்ட 7 லட்சத்து 5 ஆயிரத்து 579 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2.47 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும், டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இயலாதவா்கள் ஜனவரி 13 ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், தஞ்சாவூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. தமிழ் நங்கை, தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா் வெ. பெரியசாமி, தஞ்சாவூா் சரக துணைப் பதிவாளா் ரா. விநாசாந்தினி, தஞ்சாவூா் பொது விநியோக திட்டத் துணைப் பதிவாளா் ஆ.சு. லேகா, தஞ்சாவூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் ஆ. கேத்ரீன், துணைப் பதிவாளா் (பயிற்சி) ஆ. பிரான்சிஸ் சகாய ஆரோக்கியமேரி, வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் கமலகண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.