அட்சய திருதியை கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருடசேவை
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் அட்சய திருதியை நாளை முன்னிட்டு, ஒரே இடத்தில் 12 கோயில்களின் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளிய 12 கருட சேவை பிரம்மோத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபால சுவாமி, பட்ராச்சாரியாா் தெருவில் உள்ள கிருஷ்ணசுவாமி, வெங்கட்ராயா் அக்ரஹாரத்திலுள்ள பட்டாபி ராமா், சோலையப்ப முதலியாா் அக்ரஹாரத்தில் உள்ள ராமசுவாமி, மல்லுக செட்டித்தெருவில் உள்ள சந்தான கோபால கிருஷ்ண சுவாமி, கொட்டையூா் நவநீத கிருஷ்ண சுவாமி, மேலக்காவிரி வரதராஜா், அகோபில மடம் லட்சுமி நரசிம்மா் ஆகிய 12 பெருமாள்களும் கருட வாகனத்தில், ஆஞ்சனேயருடன் கும்பகோணம் பெரியதெருவில் ஒரேஇடத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.
இந்த 12 கருட சேவை பிரம்மோத்ஸவத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கும்பகோணம் காசுக்கடை தா்ம வா்த்தகா்கள் சங்கத்தினா் செய்தனா்.
Advertisement