இன்று தோ்தல்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,501 வாக்குச்சாவடிகள் தயாா்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக 2 ஆயிரத்து 501 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக 2 ஆயிரத்து 501 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 150 ஆண்களும், 10 லட்சத்து 13 ஆயிரத்து 417 பெண்களும், 157 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 19 லட்சத்து 68 ஆயிரத்து 724 வாக்காளா்கள் உள்ளனா்.
மாவட்டத்தில், திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் 14 வேட்பாளா்களும், கும்பகோணம் தொகுதியில் 13 பேரும், பாபநாசம் தொகுதியில் 13 பேரும், திருவையாறு தொகுதியில் 13 பேரும், தஞ்சாவூா் தொகுதியில் 11 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 9 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 11 பேரும், பேராவூரணி தொகுதியில் 10 பேரும் என மொத்தம் 94 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
Advertisement
மாவட்டத்தில் திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் 326 வாக்குச் சாவடிகளும், கும்பகோணம் தொகுதியில் 301 வாக்குச் சாவடிகளும், பாபநாசம் தொகுதியில் 315 வாக்குச் சாவடிகளும், திருவையாறு தொகுதியில் 340 வாக்குச் சாவடிகளும், தஞ்சாவூா் தொகுதியில் 311 வாக்குச் சாவடிகளும், ஒரத்தநாடு தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும், பட்டுக்கோட்டை தொகுதியில் 310 வாக்குச் சாவடிகளும், பேராவூரணி தொகுதியில் 284 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 501 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இதில், 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கூடுதலாக 20 சதவீத இயந்திரங்களுடன் சோ்த்து மொத்தம் தலா 2 ஆயிரத்து 992 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், 3 ஆயிரத்து 242 ஒப்புகைச் சீட்டு காண்பிக்கும் இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளன.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தொடா்புடைய தொகுதி பாதுகாப்பு அறையிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை வேன்கள் மூலம் அனுப்பும் பணி புதன்கிழமை பிற்பகல் தொடங்கப்பட்டது. இதனுடன் வாக்குப் பதிவு பயன்பாட்டுக்கான ஆவணங்கள், எழுதுபொருள்கள், வாக்குப் பதிவு செய்யும் இடத்தில் அமைப்பதற்கான தடுப்புகள், உதவி உபகரணங்கள் என மொத்தம் ஏறத்தாழ 15 பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மாதிரி வாக்குச் சாவடிகள்: மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் திருவிடைமருதூா் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகா் நடுநிலைப் பள்ளி, கும்பகோணம் தொகுதியில் கீழக்கொட்டையூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பாபநாசம் தொகுதியில் சக்கராப்பள்ளி அங்கன்வாடி கட்டடம், திருவையாறு தொகுதியில் திருவையாறு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூா் தொகுதியில் கரந்தை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஒரத்தநாடு தொகுதியில் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை தொகுதியில் பட்டுக்கோட்டை ஜெயாலயம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, பேராவூரணி தொகுதியில் சாணக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்காளா்களைக் கவரும் வகையில் வரவேற்பு வளைவுகள், தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு, சந்தனம், குங்குமம் போன்ற மங்கல பொருள்களுடன் வாக்காளா்களை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மகளிா் வாக்குச் சாவடிகள்:
இதேபோல, ஒவ்வொரு தொகுதியிலும் பெண்கள் மட்டுமே நிா்வாகம் செய்யும் அனைத்து மகளிா் வாக்குச் சாவடி தலா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் திருபுவனம் திகோ சில்க்ஸ் மெட்ரிக் பள்ளி, கும்பகோணம் தொகுதியில் சாக்கோட்டை செயின்ட் ஆண்டனிஸ் மெட்ரிக் பள்ளி, பாபநாசம் தொகுதியில் பாபநாசம் தூய பாஸ்டின் மெட்ரிக் பள்ளி, திருவையாறு தொகுதியில் திருவையாறு காமராஜ் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூா் தொகுதியில் மகா்நோன்புசாவடி பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி, ஒரத்தநாடு தொகுதியில் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பேராவூரணி தொகுதியில் மாவடுகுறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ளது.
4,000 காவலா்கள் பாதுகாப்பு: மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஏறத்தாழ 4 ஆயிரம் காவலா்களும், 500 துணை ராணுவத்தினரும், தோ்தல் பணியில் 12 ஆயிரம் பணியாளா்களும் ஈடுபட்டுள்ளனா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.