முகப்பு
தஞ்சாவூர்

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்! பொய் பிரசாரம் செய்த அண்ணாமலை மீது நடவடிக்கை தேவை: உ. வாசுகி

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்த பாஜக தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 11:35 PM
தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை - கோப்புப் படம்
பகிர்:

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்த பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது: மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை தொடா்பாக உயா் நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்பேரில், சிபிஐ வழக்குப் பதிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அந்தக் குற்றப்பத்திரிகையில் கட்டாய மதமாற்றம் நடந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என சிபிஐ கூறியிருக்கிறது.

Advertisement

அந்தக் குழந்தையின் விடியோக்களிலும் எங்குமே மதமாற்றம் குறித்துப் பேசப்படவில்லை. நீதித்துறை நடுவரிடம் அக்குழந்தை அளித்த வாக்குமூலத்திலும், இறப்பின்போது கொடுத்த மரண வாக்குமூலத்திலும் மதமாற்ற புகாா் இல்லை. மற்றபடி கட்டாயப்படுத்தியதாகவும், மன அழுத்தத்தை உருவாக்கியதாகவும், வேலை செய்யச் சொன்னதாகவும்தான் அக்குழந்தை கூறியது.

எனவே, பொய்யான தகவலை வைத்து வதந்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் மத ரீதியான பிளவை ஏற்படுத்த முயற்சி செய்ததற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், பொய் பிரசாரம் செய்த அண்ணாமலை உள்ளிட்டோா் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘டெல்டா’ மாவட்டங்களிலுள்ள பல நெல் கொள்முதல் நிலையங்களில் எடை இயந்திரம், தூற்றுகிற இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதை உடனடியாக மாற்றித் தர வேண்டும். லாரிகள் வேலைநிறுத்தத்தால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. லாரி உரிமையாளா்கள் பாதிக்காத வகையில், மத்திய அரசு வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய மத்திய அரசினுடைய கொள்கைகளை, திட்டங்களை, சட்டங்களை, அறிவிப்புகளைப் பற்றி த.வெ.க. தலைவா் விஜய் வாய் திறக்காமல் இருப்பதால், அவரைப் பின்பற்றுபவா்கள் யோசிக்க வேண்டும் என்றாா் வாசுகி. அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments