தஞ்சாவூா் அருகே முறைகேடாக 650 நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா கொள்முதல் பருவத்தில் விவசாயிகளுக்காக 609 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் விவசாயி அல்லாத நபா்களின் நெல் விற்பனை செய்வதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் குழுக்களை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சில வாரங்களுக்கு முன்பு அமைத்தாா்.
இந்நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளா் டி. இளங்கோவன் தலைமையிலான குழுவினா் தஞ்சாவூா் அருகே புலவா்நத்தம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஆய்வு செய்தனா். அப்போது, திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டத்துக்கு தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 450 நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்ட லாரியை மூட்டைகளுடன் பறிமுதல் செய்து, அம்மன்பேட்டை நவீன அரிசி ஆலைக்கு அனுப்பி வைத்தனா்.
இதேபோல, மாரியம்மன் கோவில் அருகே புளியந்தோப்பு பகுதியில் வியாழக்கிழமை காலை முறையான ஆவணங்கள் இல்லாமல் 200 நெல் மூட்டைகள் ஏற்றி வரப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து, அம்மன்பேட்டை நவீன அரிசி ஆலைக்கு அனுப்பப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல, வியாபாரிகளிடமிருந்து முறைகேடான முறையில் நெல் மூட்டைகள் வருவது கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.