கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணியை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் தெற்கு கோபுரம் மொட்டை கோபுரமாக இருந்தது. இந்த கோபுரத்தை உபயதாரா் நிதி மூலம் ரூ. 3.65 கோடி மதிப்பில் 61 அடி உயரத்தில் 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதற்கான கட்டுமானப்பணி மற்றும் ரூ. 1.79 கோடி மதிப்பில் கிழக்கு ராஜகோபுரத்தில் வண்ணமயமான ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும் சென்னையிலிருந்து காணொலி காட்சிவாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து கோயில் வளாகத்தில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்.எல்.ஏ. கட்டுமான பணியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மாநகர திமுக செயலரும் துணை மேயருமான சு.ப.தமிழழகன், துணை செயலா் ப்ரியம் ஜெ.சசிதரன், அறநிலையத்துறை இணை ஆணையா் சிவக்குமாா், செயல் அலுவலா் பா.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.