பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில், வியாழக்கிழமை காலை வழங்கிய உணவில் மரப்பல்லி கிடந்தது. இந்த உணவை சாப்பிட்ட 15 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மன்னாங்காட்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வியாழக்கிழமை காலை வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 15 மாணவ, மாணவிகள் திடீரென்று வாந்தி எடுத்தனா். இதில் சிலா் மயங்கி விழுந்தனா்.
உடனே, பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸாா், பள்ளியில் இருந்த உணவை பரிசோதனையிட்டபோது சாம்பாரில் மரப்பல்லி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.