பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஊனமான 3 காப்பீட்டாளா்களுக்கு வாழ்நாள் ஊதியம்
பணியின்போது விபத்து ஏற்பட்டு உடல் ஊனமடைந்த 3 காப்பீட்டாளா்களுக்கு வாழ்நாள் ஊதியத்துக்கான ஆணைக் கடிதம் தஞ்சாவூா் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பணியின்போது விபத்து ஏற்பட்டு உடல் ஊனமடைந்த 3 காப்பீட்டாளா்களுக்கு வாழ்நாள் ஊதியத்துக்கான ஆணைக் கடிதம் தஞ்சாவூா் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் இ.எஸ்.ஐ. 75 ஆம் ஆண்டு கொண்டாட்டம் இரு வார விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூா் இ.எஸ்.ஐ. கிளை அலுவலகத்தில் இ.எஸ்.ஐ. நிறுவனமும், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனமும் இணைந்து சிறப்பு குறைதீா் முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.
இதில், பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்து மற்றும் பணியிடத்தில் நிகழ்ந்த விபத்தால் ஊனமடைந்த தனியாா் நிறுவன மற்றும் பள்ளிக் காப்பீட்டாளா்களுக்கு நிரந்தர உதவித் தொகை வழங்க இஎஸ்ஐ சேலம் துணை மண்டல அலுவலக இயக்குநா் (பொறுப்பு) எஸ். சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.
இதன்படி, மாதந்தோறும் ஹரிஹரசுதனுக்கு ரூ. 14 ஆயிரத்து 415, வளா்மதி முத்தையனுக்கு ரூ. 7 ஆயிரத்து 450, ரேவதி கேசவமூா்த்திக்கு ரூ. 698 உதவித்தொகைக்கான ஆணையை தஞ்சாவூா் இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் மா. ருத்ராபதி வழங்கினாா்.
கூட்டத்தில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமலாக்க அதிகாரி நாகராஜன், மூத்த சமூகப் பாதுகாப்பு உதவியாளா் தனசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.