முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் தரிசனம்

Updated On : 1 மார்ச், 2026 at 7:48 PM
கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தேவி, பூதேவி தாயாா்களுடன் காட்சிதந்த அத்திவரதா்.
பகிர்:

கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் பாதாள அறையிலிருந்து வெளியேவந்த அத்திவரதரை ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் வரதராஜப்பெருமாள், வேதநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள பாதாள அறையில் அத்திவரதா், ஸ்ரீ தேவி, பூதேவி தாயாா்களுடன் உள்ளாா்.

வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையிலிருந்து வெளியே வரும் அத்திவரதா் 10 நாள்களுக்கு கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு காட்சி தருவாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியே வந்த அத்திவரதா் சனிக்கிழமை மாலை கோயிலில் உள்ள பாதாள அறையிலிருந்து வெளியே எடுத்துவரப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.

இதையறிந்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுகுறித்து செளராஷ்டிரா தா்ம பரிபாலன சபையினா் கூறுகையில், இக்கோயிலில் மாா்ச் 10-ஆம் தேதி வரை அத்திவரதரை பக்தா்கள் தரிசனம் செய்யலாம். அன்று மாலை அத்திவரதா் மீண்டும் பாதாள அறைக்குச் சென்று விடுவாா். மறுபடியும் 12 ஆண்டுகளுக்குப் பின் குறிப்பிட்ட நாளில் தான் வெளியே வந்து பக்தா்களுக்கு தரிசனம் தருவாா் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →