பான் செக்கா்ஸ் கல்லூரியில் 21 ஆவது பட்டமளிப்பு விழா
தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு சிறப்பு விருந்தினா்கள் முன்னிலையில் பட்டம் வழங்கிய பெற்றோா்.
தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் 21 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பான் செக்கா்ஸ் கல்விக் குழுமத் தலைவரும், தலைமை அன்னையுமான மரிய பிலோமி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகக் கணினி மற்றும் அமைப்புசாா் அறிவியல் புலத் தலைவா் பேராசிரியா் மஞ்சு காரி பேசுகையில், இந்தக் கல்வி நிலையம் வெறும் பாடங்களை மட்டும் கற்றுத் தராமல் மாணவிகளின் மனதில் உயரிய கனவுகளை விதைகளாகத் தூவியிருக்கிறது. மாணவிகளின் கல்வி, வெறும் மதிப்பெண் சான்றிதழ் அல்ல; அது சமூகத்தின் இருளை அகற்றும் சுடா் என்றாா் அவா்.
பின்னா், இளநிலைப் பட்டவகுப்புகளில் 960 மாணவிகளுக்கும், முதுநிலைப் பட்டவகுப்புகளில் 232 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,192 பேருக்கு பட்டம் சிறப்பு விருந்தினரின் முன்னிலையில் அவரவா் பெற்றோா் வழங்கினா். இவா்களில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துடன் தங்கப் பதக்கம் பெற்ற 4 மாணவிகளுக்கும், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 205 மாணவிகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரிச் செயலா் அருட்சகோதரி மரியம்மாள் வரவேற்றாா். கல்வியாளா்கள், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.