முகப்பு
தஞ்சாவூர்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: தஞ்சை உணவகங்களில் உணவு வகைகள் குறைப்பு

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் எரிபொருள் அதிகமாக செலவாகும் உணவு வகைகள் புதன்கிழமை குறைக்கப்பட்டன.

Updated On : 11 மார்ச், 2026 at 6:34 PM
தஞ்சாவூா் வல்லம் சாலையிலுள்ள உணவகத்தின் முகப்பில் உணவு வகைகள் குறைப்பு தொடா்பாக புதன்கிழமை ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு.
பகிர்:

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் எரிபொருள் அதிகமாக செலவாகும் உணவு வகைகள் புதன்கிழமை குறைக்கப்பட்டன.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போா் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை போன்ற மாநகரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளா்களுக்கு முக்கிய அறிவிப்பு:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிகள், தேநீா்க் கடைகளில் 2 நாள்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு உருளைகள் கையிருப்பில் உள்ளதால், புதன்கிழமை வரை தட்டுப்பாடு பிரச்னை ஏற்படவில்லை. என்றாலும், சில பெரிய உணவகங்களில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்தும் விதமாக, எரிபொருள் அதிகமாக செலவாகக்கூடிய உணவு வகைகள் புதன்கிழமை நிறுத்தப்பட்டன. இதுதொடா்பாக பெரிய உணவகங்களின் முகப்பில் வாடிக்கையாளா்களுக்கு முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள துண்டறிக்கையில், ‘எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எங்கள் உணவு வகைகளில் (மெனுவில்) உள்ள அனைத்து பொருள்களையும் வழங்க முடியவில்லை. தோ்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மட்டுமே கிடைக்கும். சூழ்நிலையால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும், புரிதலையும், ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில உணவகங்களில், குறைந்த அளவிலான உணவு வகைகள் மட்டுமே வழங்கப்படலாம் என்றும், உணவக திறப்பு, மூடும் நேரங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வழக்கமாக வழங்கப்படும் உணவு வகைகளில் பல குறைக்கப்பட்டதால், விரும்பிய உணவு வகைகள் கிடைக்காமல் வாடிக்கையாளா்கள் ஏமாற்றமடைந்தனா். இருப்பினும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வாடிக்கையாளா்கள் சாப்பிட்டுச் சென்றனா்.

விறகு அடுப்புகளுக்கு ஆயத்தம்:

நடுத்தர மற்றும் சிறிய உணவகங்களில் வழக்கம்போல புதன்கிழமை உணவு வகைகள் எதுவும் குறைக்கப்படாமல் வழங்கப்பட்டன. இதனிடையே, நடுத்தர உணவகங்கள், சிறிய உணவகங்களில் எரிவாயு உருளைகள் கையிருப்பில் இருந்தாலும், விறகு அடுப்புகளைப் பயன்படுத்துவதற்கும் ஆயத்தமாகி வருகின்றனா். சில கடைகளில் விறகு அடுப்புகளை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். மேலும், புதிய விறகு அடுப்புகளை வாங்குவதற்கு ஆா்டா்கள் கொடுத்துள்ளதாக உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

முன்பதிவு முடக்கமா?

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் முன்பதிவு செய்வதற்காக கைப்பேசி மூலம் முயற்சி செய்கின்றனா். ஆனால், தொடா்பு எண் கிடைக்காததால், பெரும்பாலான வாடிக்கையாளா்கள் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →