முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக தஞ்சாவூருக்கு வந்துள்ள துணை ராணுவத்தினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

Updated On : 11 மார்ச், 2026 at 7:09 PM
தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவத்தினா்.
பகிர்:

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக தஞ்சாவூருக்கு வந்துள்ள துணை ராணுவத்தினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இத்தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கச் செய்வதற்காக தமிழகத்திலுள்ள மாவட்டங்களுக்கு துணை ராணுவத்தினா் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா்.

இதன்படி, குஜராத் மாநிலத்திலிருந்து துணை ராணுவமான எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து 70 போ் கொண்ட ஒரு அணியினா் ரயில் மூலம் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை இரவு வந்தனா். இப்படையினா் தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா் பழைய குடியிருப்பு வளாகத்தில் முகாமிட்டுள்ளனா்.

இந்நிலையில், ரயிலடியிலிருந்து துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இந்த அணிவகுப்பை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக அரண்மனை வளாகம் வரை சென்றடைந்தது. இதில், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், ஆய்வாளா்கள் வி. சந்திரா, சுதா, மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு காவல் துறையினருடன் இணைந்து துணை ராணுவத்தினா் வாகனத் தணிக்கை மேற்கொள்வது, பதற்றமான வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →