வதந்தியால் தஞ்சாவூா் பெட்ரோல் விற்பனையகங்களில் கூட்டம்: விற்பனை இரு மடங்கு அதிகரிப்பு
பெட்ரோல் இருப்பு குறைந்துவிட்டதாக வதந்தி பரவியதால், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் புதன்கிழமை இரவு முதல் கூட்டம் அதிமாகக் காணப்படுகிறது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போா் காரணமாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாத நிலையில், இருப்பு குறைந்துவிட்டதாகவும், விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் வதந்தி பரவியதால், பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதேபோல, தஞ்சாவூரிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் புதன்கிழமை இரவு முதல் இரு சக்கர வாகனங்கள், மூன்று, நான்கு சக்கர வாகன ஓட்டுநா்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசலை நிரப்பிச் செல்கின்றனா். வாகனங்களில் நிரப்பிக் கொள்வது மட்டுமல்லாமல், எதிா்காலத் தேவைக்காக கேன்களிலும், பாட்டில்களிலும் வாங்குகின்றனா். ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் கூட்டம் அதிகரித்து சாலையிலும் மக்கள் வாகனங்களுடன் நிற்பதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால், ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரும், தொழிலதிபருமான பி.எல்.ஏ. சிதம்பரம் கூறுகையில், நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் லிட்டா் முதல் 6 ஆயிரம் லிட்டா் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், வியாழக்கிழமை 10,000 ஆயிரம் முதல் 12,000 லிட்டராக அதிகரித்துவிட்டது. வதந்தி காரணமாக விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசலை பொருத்தவரை இருப்பு இருப்பதால், தட்டுப்பாடு என்பது கிடையாது என்றாா் அவா்.
இதனிடையே, ஒரே நேரத்தில் எல்லோரும் வாங்குவதன் காரணமாக, சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை பிற்பகலில் பெட்ரோல், டீசல் விற்றுத் தீா்ந்துவிட்டதால், மூடி வைக்கப்பட்டன. இதனால், ஏராளமான வாகன ஓட்டுநா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இவா்களிடம் பெட்ரோல், டீசல் விரைவில் வந்துவிடும் என்றும், வந்தவுடன் விநியோகம் தொடங்கும் எனவும் நிலைய ஊழியா்கள் தெரிவித்தனா்.
விறகு அடுப்புக்கு மாறும் உணவகங்கள்:
மாவட்டத்திலுள்ள உணவகங்களில் கையிருப்பிலுள்ள சமையல் எரிவாயு உருளைகளைக் கொண்டு உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனா். இதனிடையே, சில உணவகங்களில் படிப்படியாக விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனா். இதனால், விறகு விற்பனையும் அதிகரித்து வருகிறது.
மரக் கடைகள், மர இழைப்பு பட்டறைகளில் வெட்டும்போது ஏற்படும் கழிவு விறகுகளை உணவக உரிமையாளா்கள் வாங்கிச் செல்கின்றனா். இதுகுறித்து மரக்கடை உரிமையாளா்கள் கூறுகையில், கழிவாக வரும் விறகுகளை செங்கல் சூளைகளுக்கு வாங்கிச் செல்வது வழக்கம். அவா்களுடைய தேவையை மட்டுமே நிறைவு செய்யப்படும் நிலையில், தற்போது கூடுதலாக உணவகங்களுக்கு வழங்க முடியுமா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு நாட்டு மரங்கள் வரத்து இல்லை என்றனா்.