சுவாமிமலையில் உலோக சிற்பக்கலை ஸ்தபதிகளுடன் மத்திய அமைச்சா் சந்திப்பு
கும்பகோணம் அருகே சுவாமி மலையில் உலோக சிற்பங்கள் தயாரிக்கும் ஸ்தபதிகளை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் சனிக்கிழமை சந்தித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உலோக சிற்பங்கள் தயாரிக்கும் தொழிலில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மத்திய அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் சனிக்கிழமை மாலை சுவாமிமலைக்கு வந்தாா். இங்குள்ள தேவசேனா ஸ்தபதி உலக சிற்ப கூடத்துக்கு வந்து அங்குள்ள சிற்பக்கலை தொழிலாளா்களை சந்தித்து உலோக சிற்பங்கள் செய்முறைகள் குறித்து விளக்கம் கேட்டாா்.
மேலும், மத்திய அமைச்சரிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற தேவசேனா ராதாகிருஷ்ண ஸ்தபதி மகன் ஆா். சதாசிவம் ஸ்தபதி கூறுகையில்,
சுவாமி மலையில் உற்பத்தியாகும் உலோக சிற்பங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது அவை புதியவையா அல்லது பழைமையானவையா என்று கண்டறிய சென்னையில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்றால்தான் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியும்.
இந்த சான்றிதழ் பெற ஸ்தபதிகளுக்கு பல சிரமங்கள் உள்ளது. ஆதலால் சிலையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யும் சோதனை கூடத்தை கும்பகோணத்தில் அல்லது சுவாமிமலையில் அமைக்க வேண்டும். சிற்பங்கள் தயாரிக்க தேவையான உலோகப் பொருள்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாா்.
நிகழ்வில் பாஜக மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தலைவா் தங்க கென்னடி, மண்டல தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் இருந்தனா்.