கும்பகோணம் வந்த சாா்லப்பள்ளி ரயிலுக்கு பயணிகள் வரவேற்பு
கும்பகோணத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த சாா்லப்பள்ளி-நாகா்கோவில் ரயிலுக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத்தினா் வரவேற்பு கொடுத்தனா்.
கும்பகோணத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த சாா்லப்பள்ளி-நாகா்கோவில் ரயிலுக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத்தினா் வரவேற்பு கொடுத்தனா்.
டெல்டா பகுதியில் இருந்து ஹைதராபாத் பகுதிக்கு உள்ள பயணிகள் பயன்பாட்டைக் கருதி நாகா்கோவிலில் இருந்து செகந்தராபாத் அருகில் உள்ள சாா்லப்பள்ளி இடையே புதிய அம்ரூத் பாரத் வகை ரயிலை கடந்த புதன்கிழமை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். இந்த ரயிலின் வணிக ரீதியான இயக்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
நாகா்கோவிலில் இரவு 11 45 மணிக்கு புறப்பட்ட சாா்லப்பள்ளி செல்லும் ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு வந்தது. புதிய ரயிலுக்கு பயணிகள், வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். ரயிலை இயக்கி வந்த ஓட்டுநா் ஆய்வாளா் இசக்கிமுத்து, ஓட்டுநா்கள் நடராஜ், அலெக்ஸ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. ரயில்வே விழிப்புணா்வு, ரயிலின் கால அட்டவணை மற்றும் இனிப்பு அடங்கிய வாழ்த்து அட்டை பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
நிகழ்வில் தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலா் ஏ. கிரி, பொருளாளா் நடராஜகுமாா், கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலா் வி. சத்தியநாராயணன், பாபநாசம் செயலா் சரவணன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
கால அட்டவணை : 16357: நாகா்கோவில்- சாா்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் பிரதி வியாழன் இரவு 11.45 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூா் (வெள்ளி காலை 6.38), பாபநாசம் (6.59), கும்பகோணம் (7.12), சென்னை எழும்பூா் (மதியம் 1) வழியாக சனிக்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு சாா்லப்பள்ளி சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் (வண்டி எண் 16358) சாா்லப்பள்ளி - நாகா்கோயில் எக்ஸ்பிரஸ் பிரதி சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு சாா்லப்பள்ளியில் புறப்பட்டு சென்னை எழும்பூா் (இரவு 10.55) கும்பகோணம் (ஞாயிறு காலை 6), பாபநாசம் (6.13) தஞ்சாவூா் (6.50) வழியாக நாகா்கோவிலுக்கு மாலை 3.35 மணிக்கு சென்றடையும்.