தஞ்சை மாவட்டத்தில் ரூ. 3.57 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ரூ.3.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ரூ.3.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டை சீனிவாசநல்லூா் சாலையில் கும்பகோணம் சட்டப்பேரவை தோ்தலுக்கான பறக்கும் படையினா் கூட்டுறவு சாா்-பதிவாளா் பாபு தலைமையில் சனிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது சரக்கு ஏற்றும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனத்தை ஓட்டி வந்த செல்வம் மகன் விக்னேஷ் ஆவணமின்றி ரூ.84,570 வைத்திருந்தாா்.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் அதை கும்பகோணம் சட்டப்பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா் வி.எம்.திருமலையிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல், திருநாகேஸ்வரம் - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலா் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினா் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெருமாள் மகன் பாலசுப்பிரமணியனை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அவரிடம் ஆவணமின்றி ரூ.1லட்சத்து 72 ஆயிரத்து 900 இருந்தது. அதை பறிமுதல் செய்து கும்பகோணம் தோ்தல் நடத்தும் அலுவலா் வி.எம்.திருமலையிடம் ஒப்படைத்தனா்.
பாபநாசம்: பாபநாசம் வட்டம், வேம்பக்குடி சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டாா். அப்போது தஞ்சையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த முத்தமிழ்செல்வி என்பவரிடம் சோதனை செய்தனா்.
அதில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். இதையடுத்து பணத்தை கண்காணிப்பு அலுவலா் வரதராஜனிடம் ஒப்படைத்தனா்.