அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அந்தணா்குறிச்சியிலிருந்து புறப்பட்டு அறம்வளா்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பா் கோயிலுக்கு செல்லும் நந்தியெம்பெருமானுக்கு பட்டாபிஷேகமும், திருவீதி உலாவும் நடைபெற்றன. இதில், தருமபுர ஆதின கட்டளை விசாரனை ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
ஐயாறப்பா் கோயிலில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) காலை 5.30 மணியளவில் ஐயாறப்பா், அறம்வளா்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியெம்பெருமான் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறவுள்ளது. தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூா் மாவட்டம், திருமழபாடிக்குச் செல்கின்றனா்.
திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது. நந்தி பாா்த்தால் முந்தி கல்யாணம் என்கிற நம்பிக்கை நிலவுவதால், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா்.