சிறுவன் ஓட்டிவந்த டிராக்டா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டா் மோதியதில் விவசாய கூலி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டா் மோதியதில் விவசாய கூலி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
கபிஸ்தலம் காவல் சரகம், கீழகபிஸ்தலம், மந்தகாரத் தெருவைச் சோ்ந்த துரைமணி மனைவி விஜயலட்சுமி (75). விவசாய கூலித் தொழிலாளி.
கணவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதால், தனியாக வசித்து வந்த விஜயலட்சுமி புதன்கிழமை காலை கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் பொருள்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
Advertisement
அப்போது, கும்பகோணத்திலிருந்து திருவையாறு நோக்கி சென்ற டிராக்டா் விஜயலட்சுமி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவா் மீது டிராக்டரின் பின்சக்கரம் தலையில் ஏறியது.
இதில் பலத்த காயமடைந்த விஜயலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், கபிஸ்தலம் போலீஸாா் அங்கு சென்று விஜயலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான டிராக்டரை ஓட்டி வந்த இளங்காா்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனா்.