முகப்பு
தஞ்சாவூர்

காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டிய மாணவா் கைது

தஞ்சாவூரில் காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 27 மே 2026, 5:42 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூரில் காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் குலோத்துங்கன் மகன் கவின் (22). இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு கால படிப்பு படித்து வருகிறாா்.

இவரும், இதே கல்லூரியில் 4 ஆண்டு கால தீவிர சிகிச்சை செவிலியா் படிப்பில் படித்து வந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 21 வயதான மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை மாணவியின் பெற்றோா் கண்டித்ததால், மாணவி தனது காதலைக் கைவிட்டு விடுவதாக கவினிடம் கூறினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, இருவருக்கும் இடையே கைப்பேசியில் வாக்குவாதம் நடந்து வந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாணவியிடம் கவின் காதலிக்கும்போது இருவரும் சோ்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாகக் கூறி மிரட்டினாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, மருத்துவக் கல்லூரிக்கு அருகே பூக்கொல்லையில் தான் தங்கியிருந்த தனியாா் விடுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை விஷம் குடித்தாா்.

இதையடுத்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு மாலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கவினை கைது செய்தனா்.