கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தங்களுக்கு எதிராக பேசி, தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் வருகிறது என்றார் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொ. அய்யாக்கண்ணு.
தில்லியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை பார்க்க ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அய்யாக்கண்ணு, திங்கள்கிழமை காலை செய்தியாளர்களிடம் கூறியது:
நதிகள் இணைப்பு, வறட்சி காரணமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் ஜூலை 16 ஆம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த 2 நாள்களாக பல்வேறு தொலைபேசி எண்களிலிருந்து மிரட்டல் வருகின்றன. வங்கியில் கடன் வாங்கினால் கட்டித்தான் ஆக வேண்டும். இதற்காக தில்லிக்கு வந்து போராடக்கூடாது. தில்லியை விட்டு வந்து தமிழக முதல்வர் வீடு முன்பு போராட்டம் நடத்துங்கள் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.
போராட்டத்தை கைவிடாவிட்டால் இரவு நேரத்தில் தூங்கும் போது விவசாயிகளை லாரி ஏற்றி கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். விவசாயிகளின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையிலான செயல்கள் நடைபெற்று வருகின்றன.
மிரட்டல் குறித்து தில்லி பார்லிமெண்ட் ஸ்டிரீட் காவல் நிலையத்திலும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யிடமும் புகார் அளித்துள்ளோம் என்றார் அய்யாக்கண்ணு.
பேட்டியின் போது வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.