திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறைகள், தங்கும் இடங்களின் கட்டணங்கள் எளிமையாக்கப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
ரயில் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் சலுகை கட்டணத்தில் ஓய்வறைகள், சிறிது நேரம் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டண விகிதம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நாள் 1-க்கு (24 மணிநேரம்) தங்குவதற்கு ரூ.1000 என்றால் 12 மணி நேரம் தங்குவதற்கு ரூ 600-ம், ரூ. 800 கட்டணமாக உள்ள அறைகளுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ. 500 எனவும், அதேபோல ரூ.500-க்கு ரூ.300, ரூ.400-க்கு ரூ.240, ரூ. 240-க்கு ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இருக்கை வசதியுடன் தங்குமிடங்களுக்கு நாள் ரூ.250 எனில் 12 மணி நேரத்துக்கு ரூ.150-ம் 6 மணி நேரத்துக்கு ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கட்டண விகிதம் ரயில் நிலையங்களின் தரம், அறையில் குளிர்சாதனம், டீலக்ஸ் என தரத்துக்கேற்ற வகையில் மாறுபடும். இத்தகவலை திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளது.