ஐயப்ப பக்தர்களுக்கு காவிரிக் கரையில் சிறப்பு முகாம்கள்
காவிரிக் கரையில் இரு இடங்களில் சபரிமலை பக்தர்களுக்கான சிறப்பு முகாம்கள் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளன.
காவிரிக் கரையில் இரு இடங்களில் சபரிமலை பக்தர்களுக்கான சிறப்பு முகாம்கள் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளன.
முகாம்களில் மூன்று வேளை அன்னதானம், மருத்துவ முகாம், சபரிமலை செல்ல வழிகாட்டி ஆலோசனை, நடைபயணத்துக்கான துணை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
சபரிமலையில் 72 ஆண்டுகளாகச் சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கமானது திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றிணைத்து திருச்சி யூனியன் என்ற பெயரில் 100 கிளைகளுடன் செயல்படுகிறது.
திருச்சி யூனியன் சார்பில், கடந்த 2011 முதல் சபரிமலை பக்தர்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன்படி, நிகழாண்டுக்கான சிறப்பு முகாம் காவிரிக் கரையில் இரு இடங்களில் வியாழக்கிழமை (நவ.16) தொடங்கியது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபச் சாலையில் காவிரி புஷ்கரம் நடைபெற்ற இடத்திலும் (கோனார் சத்திரம் எதிரே) ஒரு முகாமும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரிக் கரையோர கல்லணை சாலையில் ஒரு முகாமும் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி யூனியன் செயலர் எம். ஸ்ரீதர் கூறியது:
நவ.16 தொடங்கி ஜன. 17 வரை 64 நாள்களுக்கு நடைபெறும் இரு முகாம்களிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சபரிமலை பக்தர்களுக்கு மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படும்.
சபரிமலை போக்குவரத்துப் பாதை, திருச்சி மாவட்ட திருக்கோயில்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படும். சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மூலம் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்படும். சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொடுக்கப்படும். பக்தர்களுக்கு கழிப்பறை, குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. பாத யாத்திரை பக்தர்களுக்கு கால் உறை (சாக்ஸ்), இரவு நேர வாகனங்கள் எளிதில் அறியும் வகையில் இருமுடியில் ஒளிரும் வில்லை ஒட்டித் தரப்படும். இந்த முகாம்களை பக்தர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருச்சிக்கு வரும் சபரிமலை பக்தர்களுக்கு முகாம் இடங்களைத் தெரிவித்து பொதுமக்களும் உதவலாம். கார்த்திகை, மார்கழி, மகரவிளக்கு விழாக் காலம் வரையில் 64 நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் இயங்கும் என்றார்.
இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் ரமேஷ், நிறுவனர் முரளி, கௌரவத் தலைவர் சபரிதாசன், பொருளாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்கின்றனர்.