நெல் உற்பத்தி குறைவால் சரக்கு ரயில் வருவாயில் ரூ. 34.88 கோடி இழப்பு
தமிழகத்தில் காவிரி நீர் பிரச்னை, நெல் உற்பத்தி குறைவால் கடந்த நிதியாண்டில் சரக்கு ரயில் போக்குவரத்தில் கிடைக்க வேண்டிய வருவாயில் ரூ. 34.88 கோடியை இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி நீர் பிரச்னை, நெல் உற்பத்தி குறைவால் கடந்த நிதியாண்டில் சரக்கு ரயில் போக்குவரத்தில் கிடைக்க வேண்டிய வருவாயில் ரூ. 34.88 கோடியை இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பதப்படுத்தி கிடங்குகளில் சேமிக்கப்படும். அங்கு தேவையானவை போக மீதமுள்ள நெல்கள் சரக்கு ரயில்கள் மூலம், நீடாமங்கலம், தஞ்சை, திருவாரூர், பேரளம், கும்பகோணம்,மயிலாடுதுறை, நாகை, சீர்காழி உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களிலிருந்து பிற மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் தெற்கு ரயில்வேயில் திருச்சி கோட்டத்துக்கு வருவாய் கிடைத்து வந்தது.
இந்நிலையில், கடந்த சிலஆண்டுகளாக நெல் உற்பத்தி குறையத் தொடங்கியதையடுத்து, வெளி மாநிலங்களுக்கு சரக்கு ரயில் மூலம் நெல் அனுப்புவதும் குறைந்தது. இதனால் சரக்குப் போக்குவரத்து வருவாய் குறைந்தது. கடந்த 2015-16 நிதியாண்டில் சுமார் 6.07 லட்சம் டன் நெல் மூட்டைகள், 216 சரக்கு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட வகையில் வாடகையாக, ரயில்வே துறைக்கு ரூ. 45.23 கோடி வருவாய் கிடைத்தது. 2016-17இல் 50.8 சதவிகிதம் குறைந்து சுமார் 2.98 லட்சம் டன் நெல்மூட்டைகள், 106 ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில் ரூ. 22.34 கோடியாக குறைந்தது.
ஆனால், கடந்த நிதியாண்டில் ( 2017-18) முந்தைய ஆண்டைக்காட்டிலும் 52.9 சதவிதம் குறைந்து, சுமார் 1.40 லட்சம் டன் நெல் மூட்டைகள் மட்டுமே வெறும் 50 ரயில்களில் அனுப்பப்பட்டன. இதன் மூலம் ரூ. 10.35 கோடி மட்டுமே வருவாயாக கிடைத்தது.
ஆகவே, 2015-16, 17-18ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த நிதியாண்டில் ரூ. 34.88 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகல ரயில் பாதை மேம்பாட்டு திட்டப் பணிகளின் போது சரக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், பெரும்பாலான நெல்மூட்டைகள் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அவை தவிர சரக்குப் போக்குவரத்தில் ரயில்வே துறையில் வருவாய் இழப்பு அதிகப்படியாக இருந்ததில்லை. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில்தான், ரயில்வேயின் டெல்டா மாவட்ட உணவுதானிய சரக்கு போக்குவரத்து மிகப் பெரிய சரிவைக் கண்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நெல் உற்பத்தி குறைவு என்பதுதான்.
நிரந்தர தீர்வு
இது குறித்து தெற்கு ரயில்வே தஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், பருவ மழை பொய்த்தது, காவிரி பிரச்னை, நெல்
உற்பத்தி குறைவு ஆகவேதான் ரயில்வே துறைக்கு கிடைந்து வந்த வருவாயில் கடந்த 7 நிதியாண்டுகளில் சுமார் ரூ.130 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, முறையாக தண்ணீர் பங்கீடு கிடைத்து, டெல்டா விவசாயம் மீண்டால் மட்டுமே ரயில்வே துறையில் சரக்குப் போக்குவரத்தில் இழப்பை தடுக்க முடியும் என்றார்.