திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள மரத்தோப்பு ஞாயிற்றுக்கிழமை எரிந்து நாசமானது. மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கொடும்பப்பட்டி கிராமம் குளுந்தாம்பட்டியைச் சேர்ந்தவர் செவந்தி மனைவி பொன்னழகு (54), விவசாயி. இவருக்குச் சொந்தமாக வளநாடு அருகேயுள்ள 1 ஏக்கர் தோட்டத்தில் தேக்கு, தென்னை மரங்களை பயிரிட்டிருந்தார்.
பொன்னழகு ஞாயிற்றுக்கிழமை வெளியூர் சென்றுவிட்டு திங்கட்கிழமை காலை வீடு திரும்பிய நிலையில், தனது தோட்டத்துக்குச் சென்றபோது அங்கு நன்கு விளைந்த நிலையில் இருந்த 269 தேக்கு மரங்களும், பாதிக்கு மேல் பாலை விட்டிருந்த 101 தென்னை மரங்களும் தீயில் கருகியிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னழகு முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தோட்டத்துக்குத் தீ வைத்ததாக அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.