திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 43 மதுக்கடை மூடல்
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து திருச்சி மாவட்டத்தில் 43 மதுக்கடைகள் ஒரே நாளில் மூடப்பட்டன.
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து திருச்சி மாவட்டத்தில் 43 மதுக்கடைகள் ஒரே நாளில் மூடப்பட்டன.
நெடுஞ்சாலைகளையொட்டி 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழகத்தில் சுமார் 3,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதனையடுத்து நீதி மன்ற உத்தரவை மீறாத வகையில் சுமார் 1,700 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் தமிழக அரசுக்கு மீண்டும் வருவாய் அதிகரித்தது. இதனை எதிர்த்து, பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் கே. பாலு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேசிய நெடுஞ்சாலைகளை தரம் மாற்றாமலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகவும், அவ்வாறு திறக்கப்பட்ட கடைகளை மீண்டும் மூட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை சனிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபாணர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் கொண்ட முதலாவது டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளை தரம் மாற்றாமல் கடைகளை திறந்தது தவறு. எனவே, திறந்த கடைகளை மூடவேண்டும். புதிய கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து திருச்சி மாநகரில் 35 கடைகள், புறநகரில் 8 கடைகள் என 43 கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.