வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது பற்றி...
வேளச்சேரி - பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை இன்று அதிகாலை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வழித்தடம் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணத்தை மேற்கொள்ள முடிவதாக பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு...
சென்னையில் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் உயர்நிலை பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 100 ரயில் சேவைகளில் சுமார் 1 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான 4.5 கி.மீ. தொலைவுக்கு அந்த ரயில் சேவையை நீட்டிக்கும் பணி கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.
ஆனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான வழக்கு உள்ளிட்டவற்றால் பணிகள் முடங்கியிருந்தன.
கடந்த 2022-ஆம் ஆண்டு பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதை அடுத்து பணிகள் மீண்டும் தொடங்கின. தற்போது அந்தப் பாதையில் 167 தூண்கள் அமைத்து ரயில் பாதையும் அமைக்கப்பட்டு, அதில் மின்சார இணைப்பும் தரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, ரயில்களை இயக்குவதற்காக ‘தற்காலிக அதிகாரபூா்வ சான்றிதழை’ ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையா் வழங்கினார்.
இந்த நிலையில், பணி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வேளச்சேரி - பரங்கிமலை இடையே இன்று அதிகாலை 5 மணிமுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
96 ரயில்கள்
இவ்வழித்தடத்தில் கடற்கரை - பரங்கிமலை இரு மாா்க்கத்திலும் 86 ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் கடற்கரை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 4 ரயில்கள், பரங்கிமலை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 6 ரயில்கள் இயக்கப்படும். என மொத்தம் 96 ரயில்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.
ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும் விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.