தமிழக அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் ஆன்-லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் முறை செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் மாவட்ட பதிவாளர் மற்றும் சார்- பதிவாளர் அலுவலகங்கள் என அனைத்து அலுவலகங்களிலும் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள அசல் பத்திரப்பதிவு அலுவலகம், டவுன்ஹாலில் உள்ள 3ஆம் இணை சார்-பதிவாளர் அலுவலகம் மற்றும் உறையூர் டவுன்ஹால், திருவெறும்பூர், கே. சாத்தனூர், ஶ்ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, காட்டுப்புத்தூர், தா.பேட்டை, மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை முதல் ஆன்-லைன் பதிவு முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், நாளொன்றுக்கு 100 பத்திரங்கள் வரை பதிவு செய்யலாம். ஒரு பத்திரம் பதிவு செய்ய 30 நிமிடங்களுக்குள் பரிவர்த்தனைகளை முடித்துவிடலாம். சொத்துப் பதிவு, விலங்கசான்று, பாகப் பிரிவினை, தானப்பத்திரம், சொத்து விற்பனை, பாக உடன்படிக்கை, திருமணப் பதிவு, சங்கப் பதிவு என 36 வகையான பதிவுகளை ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் போலிப் பத்திரங்கள் ஒழிக்கப்படும். தவறுகள், பிழைகளுக்கு இடம் இருக்காது. பணிகளும் விரைந்து முடியும். ஆவங்களும் கணினிமயமாகும் என பதிவுத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.