முதியோர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்த தொடர் ஆய்வு திருச்சியில் தொடங்கியுள்ளது.
திருச்சி, கன்னியாகுமரி, தருமபுரி, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் தமிழக அரசின் நிதியுதவியுடன் முதியோர் வாழ்க்கைத்தரம் குறித்த சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. புள்ளியியல் துறை சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆய்வுக்காக தமிழக அரசு ரூ.6.06 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சியில் ஆய்வு நடத்துவதுதொடர்பான பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து ஆட்சியர் கு.ராசாமணி பேசியது: நகர்ப்புறம், கிராமப்புறங்களில் 8 ஆயிரம் குடும்பங்களில் உள்ள முதியோர்களை தேர்வு செய்து அவர்களிடம் சமூக, பொருளாதார நிலை, உடல்நிலை, மன நிலை, நிதி மற்றும் வாழ்வியல் சூழ்நிலை குறித்த விவரங்களை கேட்டறியும் வகையில் இந்த ஆய்வு நடைபெறும். 55 வயது முதல் 100 வயது வரையுள்ள முதியோர்களிடம் இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு முதியோர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்தும். எனவே, முதியோர் குறித்த சமூக, பொருளாதார நிலைகளில் துல்லியமான விவரங்களை சேகரிக்க வேண்டியது அவசியமானது. ஆய்வுப் பணியில் ஈடுபடும் புள்ளியியல்துறை பணியாளர்கள் எந்தவித தவறுகளுமின்றி சரியான விவரங்களை சேகரிக்க வேண்டும். முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்றார். இந்த பயிற்சி வகுப்பில், புள்ளியியல் துறை மண்டல இணை இயக்குநர்கள் சின்னமாரி, சி.தினமணி, துணை இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், அண்ணாதுரை மற்றும் உதவி இயக்குநர்கள், புள்ளியியல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.