துறையூர் அருகே கோயிலில் சுவாமி தூக்குவதில் இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.
வெங்கடாசலபுரத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் 1996-ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்கு வழக்கமாக பொங்கல் முடிந்த பிறகு கரிநாளில் மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஊர் வழக்கப்படி சுவாமி வீதி உலா ஏற்பாடுகள் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக ஊர் எல்லையில் உள்ள கருப்பண்ண சுவாமி கோயிலிலிருந்து சக்திவேல் எடுத்து வரும் நிகழ்ச்சி காலையில் நடைபெற்றது. மாலையில் வீதி உலாவுக்காக கோயிலிலிருந்து மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்துக்கு சுவாமியை எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரு பிரிவினர் (கல் உடைக்கும் தொழிலாளர்கள் ) தங்களுக்கும் சுவாமியை தூக்கிச் சென்று வாகனத்தில் வைக்க உரிமை இருப்பதாக கூறினர்.
இதற்கு கடந்த ஆண்டு சுவாமி தூக்கியவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு வந்த துறையூர் காவல் ஆய்வாளர் எல். மனோகரன் தலைமையிலான போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.