இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஹஜ் புனித பயணத்துக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் திருச்சி கோட்டை அருணாச்சலம் மன்றம் அருகே வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகரத் தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார். புறநகர் தெற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்டத் தலைவர் கலை, கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், சிறுபான்மையினர் பிரிவு மாநில துணைச் செயலாளர் மன்சூர்அலி, மகளிரணி மாநில செயலாளர் ஜெகதீஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர்கள் நசீர், ராஜா, ரெக்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், ஹஜ் பயணத்துக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்ததைக் கண்டித்தும், அதனை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.