அடிப்படை ஓய்வூதிய முரண்களை களைய வலியுறுத்தல்
அடிப்படை ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்களைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் கிராம உத்தியோகஸ்தர்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அடிப்படை ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்களைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் கிராம உத்தியோகஸ்தர்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓய்வூதியர்களில் 80 வயது நிறைவடைந்த அனைவருக்கும் அரசு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி வருவதுபோல, முன்னாள் கிராம உத்தியோகஸ்தர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக சங்கத்தின் தலைவராக இருந்த வெங்கட்ராமனால் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிர்வாகிகள் அதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஏழாவது ஊதியக் குழு அறிவிக்கையின்படி, மாநில அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய விவரம், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், அடிப்படை ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்களைக் களைய வேண்டும் என ஒரு நபர் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இப்பிரச்னைக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் மகாதானபுரம் வி.ராஜாராம், காந்திப்பித்தன், கே. ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூடத்தில் மாநிலத் தலைவராக- கே. பாலகிருஷ்ணன், செயலராக- கே.ராமச்சந்திரன், பொருளாளராக-டி.கே.லூர்துசாமி, துணைச் செயலராக வி. அர்ச்சுனன், துணைத் தலைவராக டி.எம். விசுவநாதன் மற்றும் மகாதானபுரம் வி.ராஜாராம், திருச்சி காட்டுப்புத்தூர் கே.பி.காந்திப்பித்தன், திருச்சி லால்குடி கே. கே. ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட 13 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலச் செயலர் கே. ராமச்சந்திரன் வரவேற்றார். திருநெல்வேலி சேதுராமன் நன்றி கூறினார்.