திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக நீதிமன்றத்தில் தவெக மனு அளித்துள்ளது பற்றி..
தமிழகம் முழுவதும் திமுகவினர் ரூ. 8,000 மாதிரி கூப்பன் வழங்குவதாக தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கு நாளை(ஏப். 17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுகவின் வாக்குறுதிகளில் ஒன்றான, பெண்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே, திமுகவினர் வீடுகள்தோறும் வாக்கு சேகரிப்பதற்காகச் செல்லும்போது, ரூ. 8,000 மதிப்பிலான மாதிரி கூப்பன்கள் வழங்குவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்து வருகிறது.
Advertisement
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்த நிலையில் ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன்களை மக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என்றும் கூப்பன் மாதிரிகளை மக்களுக்கு வழங்கினால் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ரூ. 8,000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் குறித்து விளம்பரம் செய்யலாம், ஆனால் கூப்பன்களை விநியோகிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக தவெக வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் வழக்கு நாளை(ஏப். 17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சார்பில் பணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாகவும் முறையிடப்பட்டுள்ளது.