லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது மீண்டும் கொலை முயற்சி...
பாகிஸ்தானில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லாஹூர் நகரத்தில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரும், அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான அமீர் ஹம்சா மீது கடந்த வியாழக்கிழமை (ஏப். 15) அன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த ஹம்சா உயிருக்கு ஆபத்தான நிலையில், லாஹூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடைபெற்ற பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தாக்குதல்காரர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அமிர் ஹம்சா மற்றும் ஹஃபீஸ் சையத் இருவரும் இணைந்து கடந்த 1980-களில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைத் தொடங்கினர்.
இந்த அமைப்பை ஐக்கிய நாடுகள் அவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. மேலும், இந்த அமைப்பின் மூலம் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹம்சா படுகாயமடைந்தார். இதையடுத்து, ஓராண்டுக்குள் அமிர் ஹம்சாவை குறிவைத்து மற்றொரு கொலை முயற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.