எரிவாயு உருளை பதிவு செய்ய செயலி, முகநூல், சுட்டுரை வசதி: 14 மாவட்டங்களுக்கு அறிமுகம் செய்தது பாரத் கேஸ் நிறுவனம்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தின் பாரத் கேஸ் சமையல் எரிவாயு உருளைகளை பதிவு செய்ய செயலி, முகநூல், சுட்டுரை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தின் பாரத் கேஸ் சமையல் எரிவாயு உருளைகளை பதிவு செய்ய செயலி, முகநூல், சுட்டுரை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் கேஸ் நிறுவனமானது தமிழகத்தில் 4 மண்டலங்களாக பிரித்து எரிவாயு உருளை விநியோக பணியை செயல்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் எரிவாயு உருளை பதிவு செய்ய தரைவழி தொலைபேசி, கட்டணமில்லா தொலைபேசி (ஐவிஆர்எஸ்) வசதி, குறுஞ்செய்தி வசதி ஆகியவற்றை அறிமுகம் செய்து வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆன்ட்ராய்டு மற்றும் நவீன செயலிகளை பதிவிறக்கம் செய்யும் வசதியுடைய தொலைபேசி மூலம் இருந்த இடத்திலேயே எரிவாயு உருளை பதிவு செய்யும் வசதிக்காக பாரத் கேஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பரவலாக அறிமுகமாகியுருந்தாலும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், கடலூர், கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு செயலியுடன், முகநூல், சுட்டுரை வசதிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
பாரத் கேஸ் நிறுவனத்தின் தமிழகம், புதுவைக்கான தலைமை அதிகாரி ஆர். சிவசங்கரன் இந்த வசதியை அறிமுகம் செய்து வைத்து பேசியது: திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பாரத் கேஸ் நிறுவனத்தின் எரிவாயு உருளைகளை 12 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எருவாயு உருளை பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில் பாரத் கேஸ் என்ற செயலி, முகநூல், சுட்டுரை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகளை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே ஆன்-லைன் மூலமாக பதிவு செய்யலாம். மேலும், பதிவு செய்து அதற்கான தொகையையும் ஆன்-லைன் மூலமே செலுத்தலாம். அனைத்து விவரங்களும் இந்த செயலி, முகநூல், சுட்டுரை தளங்களில் இடம்பெற்றிருக்கும். இதுமட்டுமல்லாது புகார் தெரிவித்தல், பழுது நீக்குதல், பராமரித்தல், ஆய்வு செய்தல் என அனைத்து சேவைகளையும் இந்த வசதிகளை பயன்படுத்தி எரிவாயு முகவருக்கோ, நேரடியாக நிறுவனத்துக்கோ தெரிவிக்கலாம் என்றார்.
இந்த வசதி குறித்த செயல்பாடுகள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், முகவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மண்டல விற்பனை அதிகாரி சுனில் பத்ரிநாத், முகவர் நந்தா செந்தில் மற்றும் வாடிக்கையாளர்கள், முகமை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.