திருச்சியில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி
கண் நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து விழிப்புணர்வு
கண் நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கண் நீர் அழுத்த நோய் குறித்து அரசு மருத்துமனை கண் மருத்துவர்கள் கூறியது: க்ளக்கோமா என்பது கண் நீர் அழுத்த நோய். இந்த நோய் ஏற்பட்டால் கண் பின்பகுதியிலுள்ள கண் நரம்புகளை பாதிப்புக்கு உட்படுத்தி பார்வையை இழக்க நேரிடும். கண் நீரின் அழுத்தம் அதிகரிப்பதினால் இந்நோய் ஏற்படுகிறது. கண்ணிலுள்ள அழுத்தம் அதிகமாகி விட்டதால் பார்வை நரம்பு மெதுவாக பாதிக்கப்பட்டு முழுமையான பாதிப்படையும். இந்த நோய் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பித்து பார்வையை மெது மெதுவாக பறிக்கக் கூடும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் இருப்பதை எளிதில் அறியமுடியாது.
மேலும் இந்த நோயின் மூலம் ஏற்படும் பார்வை இழப்பை மருந்து மற்றும் அறுவைச் சிகிச்சையின் மூலம் சரி செய்ய இயலாது. எனவே, கண் அழுத்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் அறிந்து கொண்டு சிறப்பான சிகிச்சையை அளிக்க முடியும். இதனால் பார்வை இழப்பை கண்டிப்பாக தடுக்க முடியும். தேசிய பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அளிக்கும் புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 1.8 சதவீதம் பார்வை இழந்த மக்கள் கண் நீர் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். அகில இந்திய அளவில் மொத்தம் 12 மில்லியன் மக்கள் கண் நீர் அழுத்த நோயினால் தங்களது பார்வையை இழந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1.7 சதவீத மக்கள் கண் நீர் இழுத்த நோயினால் பாதிப்படைந்துள்ளனர். தற்பொழுது இந்த நோய் மேலும் அதிகரித்து மூன்று மடங்கு அதிகமாகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நோயின் அறிகுறிகளாக பார்வையின் முன் கருப்பாக தெரிவது அல்லது சில இடங்களில் தெரியாமல் போவது, கண் பார்வை மெல்ல, மெல்ல குறைவது, வெளிச்சமான பகுதியில் பார்வையில் ஒளி வட்டம் தெரிவது உள்ளிட்டவையாகும். மேலும் நீண்ட காலமாக ஆஸ்மா மற்றும் முட்டுவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த நோய் வரக்கூடும். எனவே அரசு மருத்துவமனையில் இலவசமாக கண் பரிசோதனை செய்வது அவசியம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்தான், இப்பேரணி நடத்தப்படுகிறது என்றனர்.
அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பேரணியில் இருக்கை மருத்துவ அலுவலர் வாசுகி, தலைமை கண் மருத்துவர் பார்த்திபன், மருத்துவர் விஜயாசண்முகம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்க திட்ட மேலாளர் மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.