விமான நிலையத்தில் நடந்த மோதல் தொடர்பாக வழக்கு
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் செல்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சனிக்கிழமை காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர். அவர்களை வரவேற்க இருகட்சி தொண்டர்களும் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். அப்போது வைகோவை சர்க்கரை நோயாளி என நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்ததால் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் காயமடைந்த மதிமுக மாவட்டச் செயலர் வெல்லமண்டி சோமு, விவசாய அணி நிர்வாகி கண்ணுடையான்பட்டி சுப்பிரமணி ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, வெல்லமண்டி சோமு அளித்த புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, நிர்வாகிகள் கரிகாலன், வினோத், இனியன் பிரகாஷ், துரைமுருகன், பர்மா குமார் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் விமான நிலைய போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். அதேபோல மதிமுகவினர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.