திருமண வீட்டில் கதவை உடைத்து 63 பவுன் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி தில்லைநகர் 3 ஆவது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் கோ. தே. புலேந்திரன் (60). இவரது பேத்திக்கு மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து வீட்டில் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு திருமண மண்டபத்திற்கு சென்றிருந்தனர். நண்பகல் 2.30 மணியளவில் புலேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 63 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. புகாரின் அடிப்படையில், தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.