குற்ற செய்திகள்
சாலை விபத்தில் தொழிலாளி சாவு
திருச்சி கம்பரசம்பேட்டை புதுக்காலனியைச் சேர்ந்தவர் சு.முத்துக்குமார்(42). தொழிலாளியான இவர் இருசக்கர வாகனத்தில் திருவானைக்கா கொண்டயம்பேட்டை பிரிவு சாலையில் சனிக்கிழமை இரவு சென்ற போது, அங்குள்ள இரும்பு தடுப்பில் மோதி விழுந்தார்.
அப்போது பின்னால் சென்ற லாரி ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி முத்துக்குமார் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை:
அரியமங்கலம் அற்புதசாமிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் போஜராஜன்(14). பொன்மலைப்பட்டியில் உள்ள பள்ளியில்
பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர், காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த போஜராஜன் சேலையில் தூக்கிட்டுத் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பூட்டிய வீட்டில் தொழிலாளி மர்மச்சாவு:
உறையூர் வீட்டுவசதி வாரிய காலனியில் உடன்பிறவா சகோதரி வீட்டில் என்.சிவக்குமார் (56) வசித்து வந்தார். தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. சனிக்கிழமை காலை அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் கதவை திறந்து பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் சிவக்குமார் மர்மமாக இறந்து கிடந்தார். சடலத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கைதியிடம் கஞ்சா பறிமுதல்: திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஜெ.விக்கிடேனியல்(22). பாலக்கரை போலீஸாரால் வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறைத்துறையினர் அதனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கஞ்சா விற்ற இளைஞர் கைது: உறையூர் காவேரி நகர் 6ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சு.கலைச்செல்வன்(29). இவர் அங்குள்ள தனியார் விடுதி அருகே நின்று கஞ்சா விற்பனை செய்வதாக உறையூர் போலீஸாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், கலைச்செல்வனைக் கைது செய்து, அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.