மணப்பாறை ரயில் நிலையத்தில் விரைவில் புறக்காவல் நிலையம்: ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு
மணப்பாறை ரயில் நிலையத்தில் ரயில்வே புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என்றார் ரயில்வே ஏடிஜிபி சி.சைலேந்திரபாபு.
மணப்பாறை ரயில் நிலையத்தில் ரயில்வே புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என்றார் ரயில்வே ஏடிஜிபி சி.சைலேந்திரபாபு.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் டாக்டர்.ஏ.பி.ஜெ நினைவு மணவை மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. 21 கி.மீ ஓட்டப் பந்தயப் போட்டியைத் தொடக்கி வைத்ததுடன், ரயில்வே ஏடிஜிபி சி.சைலேந்திரபாபுவும் போட்டியில் பங்கேற்று ஓடினார்.
உலக இதய தினத்தை முன்னிட்டு, மூன்றாம் ஆண்டாக மணப்பாறையில் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், டாக்டர் ஏ.பி.ஜெ நினைவு குழு மற்றும் சிந்துஜா மருத்துவமனை இணைந்து ஞாயிற்றுக்கிழமை காலை மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டிகளை நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் எல். அருளரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சுமார் 4000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 21 கி.மீ., பிரிவில் இலங்கையைச் சேர்ந்த தீர்த்தகுமார் மற்றும் மணப்பாறை கலைச்செல்வி முதலாவதாக வந்து கோப்பையைக் கைப்பற்றினர். அவர்களுக்கு ரூ.21 ஆயிரம் ரொக்கம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், 21 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல், 5 கி.மீ மற்றும் 3 கி. மீ., தொலைவு ஆகிய பிரிவுகளில் ஓட்டப் பந்தயப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து ரயில்வே ஏடிஜிபி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மணப்பாறை ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு, குற்றங்களைத் தடுக்கும் வகையில், விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.