துறையூர் அருகே கோட்டப்பாளையம் ஊராட்சியில் பெயரளவில் கிராம சபைக் கூட்டம் நடத்த முயன்ற அதிகாரியைப் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலர் மனோகரன் தலைமையில் கோட்டப்பாளையம் ஊராட்சிகுள்பட்ட வலையப்பட்டி சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதனையறிந்து கோட்டப்பாளையம் கிராம இளைஞர்கள் தங்களுக்கு முன் அறிவிப்பு செய்யாமல் கூட்டம் நடத்தப்படுகிறது எனக்கூறி வரவு செலவுக் கணக்கு சமர்ப்பிக்கக் கோரினர். தொடர்ந்து, ஒன்றிய அலுவலரை உள்ளே வைத்து சமுதாயக் கூடத்தைப் பூட்டனர்.
தகவலறிந்த உப்பிலியபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குவந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். இதனையடுத்து வரவு செலவு கணக்கு தவிர மற்ற தீர்மானங்களை பொதுமக்கள் நிறைவேற்றினர். இதேபோல், நரசிங்கபுரம், கலிங்கமுடையான்பட்டி, புத்தனாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கூட்டம் நடத்தியது பொதுமக்களுக்கு அதிருப்தியை அளித்தது.