மத்திய அரசை கண்டித்து குடும்பத்தினருடன் உண்டு உறங்கும் போராட்டத்தில் படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
நாட்டில் உள்ள 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி தொழிலாளர் சங்கங்கள் கூட்டமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியது. இதே போல திருச்சியில் உள்ள படைக்கலன் மற்றும் கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அடுத்த 2 நாள்கள் தொழிற்சாலை முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் 4ஆவது நாளாக பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் உணவு உண்டு சாலையில் படுத்து உறங்கும் போராட்டத்தை நடத்தினர். முன்னதாக போராட்டம் வெற்றியடைய சிறப்பு யாகம் செய்து வழிபாடு செய்தனர்.
இதே போல வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனரக உலோக ஊடுருவி தயாரிப்பு தொழிலாளர்கள் பாடைக்கட்டி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 நாள்களாக வேலைக்கு சென்ற சில தொழிலாளர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். இதனால் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.